எண்ணற்ற துயரமதில்
எம்மவர் உட்பட
எண்ணிலடங்கா மானிடர்கள்..
ஏன் பிறந்தோம் என வேதனைப்பட..
பட்டதெல்லாம் போதும்..போதும்..என
பகலவன் ஒளி போலே
அவனவன் வாழ்வும்..
அமைய வேண்டி
ஆண்டே இரண்டாயிரத்துப்பத்தே வணங்குகின்றேன்..
இன்றைய இளைஞர்களின்
இரும்புக்கரங்களில்
நன்றே செயலாற்றும் வல்லமை
கிடைத்திட இறைவனருள் துணைபுரியவேண்டும்..
வென்றே தீருவோம் என
நன்றே செயல்படும்
நானிலங்களிலும் நல்லவுள்ளங்களின்..
நன்மையில் கண்ணே கருத்தாகயிருக்க..
ஆண்டே இரண்டாயிரத்துப் பத்தே வருக! தருக!!
அக்கினிப் பிழம்புகள்
அகிலத்தை அழிக்காதிருக்க..
அணு ஆயுதங்கள் அவதரிக்கலாகாதவாறு..
அமைதி பேண வேண்டும்..
இனம், மொழி, நாடு வேறாயினும்..
இயன்வரை அன்பு ஒன்றால்..
இவ்வையகமே இன்புற்றிருக்க..
இரண்டாயிரத்துப் பத்தே நலமுடன் வருக! வருக!!