புதன், 5 நவம்பர், 2008

புரியவில்லை..



ஓ... மனித சமுதாயமே
ஒரு கணம் எண்ணிப் பார்..


திரளாக மக்கள் திரண்டு
அலை பொங்கும் கடலாக
அள்ளிக் கொடுக்கும் மனிதநேயங்களே..நன்றிகள்.


ஒரு கணம் எண்ணிப் பாருங்களேன்...


இருக்க இடமில்லாபோது..
இருக்கை எதற்கு..?
நித்திரை இல்லாதபோது..
பாயும் படுக்கையும் எதற்கு...?


அடுப்பில்லாத போது..
அரிசியும், பருப்பும் எதற்கு..?
இருப்பிடம் இல்லாத போது..
இலவச மருத்துவம் எதற்கு..?



குடிசையோ கூடாரமோ இல்லாதபோது..
குத்து விளக்கும், மெழுகுதிரியும் எதற்கு..?
செல் வெடித்து செவிடாகிப் போன பின்பு..
செய்திகேட்க வானொலி எதற்கு..?



கண்ணைப் பறிக்கும் கதிர்கள் கண்ணைத் தாக்கியபின்பு...
கண்குளிர பார்க்கும் தொலைக்காட்சி எதற்கு..?
கண்ணி வெடியில் கால் போன பின்பு..
காலுக்குச் செருப்பு எதற்கு...?



மானம் காக்கும் உடை உடுத்த மறைவிடமில்லாதபோது..
மாற்றியுடுக்க உடை எதற்கு...?
கடையும், தெருவும் இல்லாது காட்டிலிருக்க..
கைச்செலவிற்கும், இதர செலவிற்கும் காசெதற்கு...?



பாடசாலையே இல்லாது இருக்கும் போது..
கல்விப்புத்தகமும், ஏட்டுப்புத்தகமும், எழுதுகோலும் எதற்கு...?
தெய்வமே களவு போனபின்பு..
கோயில்களும் கோபுரங்களும் எதற்கு...?



எண்ணிப்பார்...
ஒவ்வொருவரும் இதனை எண்ணிப்பார்..
எண்ணிலடங்கா மக்கள் முகவரிகள் இல்லாதபோது..



இருப்பது இருபது கோடியானாலும் என்ன பலன்..?
இன்றோடு முடிந்து விடுமா இந்த அவலம்..?
இன்னுமொரு தடவை மேடை போட்டு..
துண்டு விரிக்கும் நிலமை வேண்டாம்..



இருப்பதற்கு மீட்டுக்கொடுங்கள் நிரந்தரமாக
நின்மதியாக வாழ வழி செய்யுங்கள்..
இனியும் இந்த அவலம் ஏற்படாதவாறு..
வழி அமைத்துக்கொடுங்கள்..


இருகரம் கூப்பி வேண்டுகிறேன்..
பாதிகப்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும்
.

----------------------------------------------------

கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..
நிலாவில் உலா வரும் தனிமதி.

www.nilafm.com