செவ்வாய், 1 ஏப்ரல், 2008

ஆசையில் ஓர் கடிதம்.




அந்நிய தேசம் வந்து..

அகதியென முத்திரை குத்தி...

அயராது உழைத்து...

அவதிப்படும் வாழ்வை...

அழகாக மடல்மூலம் எழுதி அனுப்பு என்றாய்...


வாரம் ஒரு தடவை போனில்பேசினாலும்...

என் அத்தான் அன்பு மடல்..

இது வன்றோ என....


படுக்கையிலும் படிப்பதற்கு என்...

உண்மை நிலையை..

எழுத்தில் எழுதச்சொல்லுகிறாய்...


எதை எழுத...?


மடல் உன் கைக்கு வர..

என் கண்மடல் திறந்து...

மழை நீராய் வரும்...

கண்ணீர் கதைகள் எழுதவா..?


ராத்திரியில் தூக்கம் கெட்டு....

அலுவலகம் கூட்டித் துடைத்து..

குப்பை அள்ளி தூக்கிப்போட்டு...

நிலங்களை மெசின் பிடித்து....

தோள் வலிக்கிறதே என்று அம்மா..

என அலறும் கதை எழுதவா...?


பல இலட்சங்கள் கடன் பெற்று...

ஏஜென்சி மூலம் கனடா வந்து...

வந்த கடன் வட்டியோடடைக்க...

பகலும் ஒரு சாப்பாட்டுக்கடையில்...

படாத பாடு பாத்திரங்களோடு.....


பட்ட துன்பம் எழுத்தில் எழுதவா...?


அடுப்பால் இறக்கிய அண்டா அவசரமாகத்தேவை...

உடனே கழுவித்தா என்ற படியால்...

அவசரமாக கைப்பிடிகளைத் பிடித்து...

என் கைகள் சுட்டு வெந்து அம்மா எனத்துடித்து.....

தூக்கிய சட்டியை கீழே போட்டதிற்கு...

வேண்டிய பேச்சை எழுதவா...?


எதை எழுதி நீ சந்தோசமாகப்படிப்பாய்...

சொல் என் அன்பே...

இருக்கும் விடுமுறையிலும் கிடைக்குமா..

வேலை எங்காவது என்று...

வேதனைப்படும் வாழ்க்கை நிலை...எழுதவா...?


கோடைக் காலம் ஆரம்பமானால்...

விளையாட்டு மைதானங்களில்..

புல்லு வெட்டமெஷின் பிடிக்க...

கூப்பிடுவார்கள் என்ற நினைப்பில்...

என் மனதில் மாரிக்காலம் ஆரம்பமாகும்..

வறுமையை..கோடு போட்டு எழுதவா...?


நான்கு மணிநேரம் மட்டும் தூங்கி...

இரவினில் வேலையிடத்தினில்காணும்..

படிகளில் மீதி தூக்கம் போட்டு...திடுக்கிட்டு எழுந்து.. அவசரவசரமாக...பெரியவர்கள் வரமுதல் நிலம் துடைத்து காய விட..

நான் படும் அவதி நிலையை..

மனம்கதிகலங்கும் நிலையை எழுதவா...?

வேண்டாம் செல்லம்...இவையாவுமே உனக்கு வேண்டாம்...


போரின் பிடிக்குள் வாழ்ந்தாலும்...

ஒரு பிடி சோறாவது நின்மதியாய்...

உண்டு....உன்னோடும், அம்மா, அப்பா, தங்கை, தம்பி...என்று வாழ்ந்து வந்த..அந்தநினைவுகளே தினம்..

என் ஆறுதல்களம்மா....


ம்.....இதுவரையில் வாசல் வரைவந்த என் கண்ணீர் மடல் தாண்டி..

இம் மடலையும் கழுவுகிறது...

படித்துப்பார்.....உன்னோடு மட்டும்....

பிடித்து வைத்துக்கொள்...

என் அன்னை அறிந்தால் தாங்கமாட்டார்...


விடைபெறுகிறேன்......

நலமாகவுள்ளேன்..என்ற பொய்யைக் கூறிக்கொண்டு.


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி