திங்கள், 22 செப்டம்பர், 2008

யாருமில்லா ஊரில்..


சுதந்திரமில்லா நாட்டில்
வெட்டப்பட்ட மரம் ஒன்றில்
கூடிழந்து தவிக்கும் பறவை நான்..
வதிவிடம் தேடி வந்தவிடத்தில்
வார்த்தைகள் மெளனமாகி மனம் கதறுகின்றேன்...

ஓடி ஓடிச் சம்பாதித்தாலும்..
தேடி வரும் சொந்தம் எவருமின்றி
வாடிய பூவாய் மனம் வாடுகிறேன்..
புலம் பெயர்ந்து வந்த இடத்தில..

கூடி வாழ்ந்த வாழ்க்கை
கூதூகலித்த அந்நாட்கள்
ஓடி ஒளிந்து விளையாடிய பொழுதுகள்
ஒருவரை ஒருவர் அன்போடு
அரவணைத்த நிமிடங்கள்..

கோடி கொடுத்தாலும்
தேடித் திரும்ப வருமா அந்நாட்கள்..?

அதிகாலை காலை மாலை என
ஆலய மணி ஓசைகள்
வெள்ளை சீருடையில்
கள்ள மில்லா உள்ளங்கள்
பள்ளி செல்லும் காட்சிகள்..


படபடவென சிறகடித்துச்செல்லும் பட்சிகள்...
பட்டொளியாய் பறக்கும் சிறுவர்கள் கைகளில் பட்டங்கள்..
கூவிக் கூவிக் வியாபாரம் செய்யும் வியாபாரிகள்..
கூரை மேல் சேவல்
மதில் மேல் பூனை..
கூட்டுக்குள் கிளி..


காலைச் சுற்றும் நாய்..
கனிவாகப் பேச அயலவர்கள்..
ஓடி ஒளிந்து கொள்ள
அம்மாவின் முந்தானைச்சேலை..
தாவி தோளில் தொங்க அப்பாவின்
வைரமான தோள்கள்..

சிறுவயது ஞாபகங்கள்
பற்றிக் கொள்ள..

முழுநிலவு துணையோடு
பாட்டுக்குப்பாட்டும்
கேட்டுக்கொண்டு பாத்திரத்தில்
போட்டுக்கொண்ட இசையும்
தூறல் மழையில் நனைந்த சுகமும்..


இதயமாய் வீசிய தென்றல் காற்றும்..
இதயத்தை வருடும் மலர்களின் நறுமணமும்..
இதயததை விட்டு அகலாத நினைவுகளாய்
இறுதி வரை இன்பமாய் தொடருகின்றது
என் ஞாபகங்கள் யாருமில்லா இந்த ஊரில்.
__________________________________________
கொடுத்து வாழ். கெடுத்து வாழாதே..
நிலாவில் உலா வரும் தனிமதி.

www.nilafm.com