செவ்வாய், 6 அக்டோபர், 2009

பாடமறந்த பூங்குயில்..



திருமணம் என்னும் பந்தத்தில்..
உருவான பெண்ணே..
உருகும் உன் மனநிலை கண்டு
கலங்குகின்றேன் நானே..


மாலையிட்ட சொந்தம்
காலங்கள் செல்லச்செல்ல..
வேதனையும், சோதனையும் தந்து..
உன்னை வாட்டி வதைப்பதை
நினைத்து கலங்கிநிற்கின்றேன்..

பண்பாக நடந்து கொண்டால்..
அன்பாக எடுத்துச் சொல்லலாம்..
பிரச்சனை என்று வந்தால்
பேசித் தீர்த்து வைக்கலாம்.

பிரச்சனையே அவரானால்..?
எதையும் தாங்கும் இதயம்
உனக்கு வேண்டும்..

ஆணவம் தலைக்கேறி
அடாவடித்தனம் செய்யும் போது
யார் சொல்லி என்ன பலன்..?

பிரிவு என்ற சொல்லுக்கு
இலகுவில் பாலம் அமைத்துவிடலாம்..
அமைத்த பாலத்தில் வாழ்க்கைப் பாதையை
சிறப்பாக அமைக்கலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே..

காற்றடித்து மூங்கில் முறிந்துபோவதில்லை..
கூட்டுக்குள் வாழும் கிளி ஊமையாய் வாழ்ந்ததில்லை..
அலைகள் அடிப்பதால் மீன்கள் கரைவந்து சேர்வதில்லை..
இருண்ட பொழுதும் புலராமல் போனதில்லை..

நேற்று வரைக்கும் இரவினில் நீ
தலையணையை நனைத்தது போதும்..
அழுவதால் தொடரும் துயர் தீரப்போவதில்லை..
பரந்தவானில் அன்புள்ளங்கள் நிறையவுண்டு..
மனம் தளராமல் அதைப்புரிந்து வாழப்பழகிக்கொள்.