திங்கள், 21 டிசம்பர், 2009

யாரோ அவர் யாரோ..



ஆண்டு பத்து முடித்தபிறகு..
எனை ஆளப்போகும்
மன்னன்தான் யாரோ என்றறிய..

ஆலய வாசலிலே
அமர்ந்திருந்த
கிளி ஜோசியரை நாடினேன்..

ஒன்றன்பின் ஒவ்வொன்றாக
எடுத்துப்போட்டுக்கொண்டேயிருந்த கிளியிடம்..
சீக்கிரம் எடேன் கிளி என்றேன்..

ஆஹா....கூறியது புரிந்துவிட்டதோ என்னவோ...
என்னதான் அதில் என்று என் மனம் ஆவலாகயிருக்க...
வந்த படம் குதிரையில் ஓர் அரசன்..

மங்கையிவள் மனதாள..
மன்னன் அவன் வருவான் மணமுடிக்க..
சீர் கொண்டு வருவான் சிங்காரத்தேரிலவன்..

அடடா அன்றிரவு முழுக்க எனக்கேது நித்திரை..?
சித்திரையில் வருவானோ..
சிங்காரவேலனாக வருவானோ..

எப்பொழுது வருவான்..
எப்படி வருவான்..? எத்திசையிலிருந்து வருவான்..
எண்ணி எண்ணியே விடிந்தது பொழுது..

சாஸ்திரம் பார்க்கலையோ கை சாஸ்திரம்..
யாரோ ஒரு அக்கா
கையில் ஒரு புல்லாங்குழலோடு உரத்த குரலில் சொல்ல..

ஆஹா...கிளி சொன்னது சரியா எனக் கேட்டுப்பார்ப்போம்..
கல்வி என்றா, செல்வம் என்றா, ஆயுள் என்றா அப்புறம் என்றா..
அட அதை எல்லாம் விட்டிட்டு என்னை கட்டிக்க யாரு வருவான் அத சொல் என்றேன்..

வடக்கிலிருந்து வருவான்..
வக்கீலாக வருவான்..
வள்ளலாகயிருப்பான், வல்லவனாகவும் இருப்பான் என்றா..

அப்போ கிளி சொன்னது.....???

அன்றிரவும் கெட்டது தூக்கம்..

அம்மாவிடம் பத்திரமாகயிருக்கும்
எனது குறிப்பைக் கேட்டேன்..
எதுக்கோ...? கேள்வியோடு ஒரு பார்வை..

படிச்சு என்னவாகப் போறேன் என்று..
இந்த கொப்பியில இருக்காமே நண்பி சொன்னாள்..
சரி இந்தா கவனமாகத் திருப்பி தா..

ஆஹா....அவ்வளவு நம்பிக்கை என்மீது..
மணவறையில் மாலையிட வரும் மன்னன்தான் யாரோ..?
ஒரு வரிவிடாமல் பக்குவமாய் தேடியது கண்கள்..

பெற்றோர் பார்க்கும் வரன் அமையும்..
உறவினர்களுக்குள் பொருத்தம் உண்டாம்..
திருமண வயது தள்ளிப்போகும்...


ஆஹா....இவர் எழுதியது தான் உண்மையானதோ..
பேர் பெற்றவராச்சே தவறாகக் கணிக்க மாட்டார்..
கனவுகளோடு மிதந்த காலம்..

திடீரென ஆஜரானார்...
கண்களால் மோதிக்கொண்டார்..
அப்பொழுது குடியேறிவிட்டார் இதயத்தில்..

கிளி சொன்னதும்..பொய்.
குறத்தி சொன்னதும்..பொய்..
கிரகங்களைக் கணிச்சு முற்கூட்டியே எழுதிய சாஸ்திரமும் பொய்யாகிவிட்டதே..

எது எது எப்போது நடக்குமோ..
அது அது அப்போது நடக்கும்..
அதுதான் யதார்த்தம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12294
போட்டோ: அரவிந்தன்(கூகிள் நெட்)

கருத்துகள் இல்லை: