புதன், 25 ஜூன், 2008

அதிகாலை மலர் அது.





அதிகாலை துயிலெழுந்து..
ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..
விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..

படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..
பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..
பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..

புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..
புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய, அதை எடுத்து
பக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....

ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..
ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..
அப்படியே மடிப்புக்குலையாதவாறு ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..

நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..
திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..
வாளியோடு தண்ணீர்எடுத்து, வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..

அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..
வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..
எறும்புப் பட்டாளப்படையின் விருந்துண்ண வருகைகண்டு..

எதிரில் நானும் அதை ரசித்தபடி..
எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..சோர்ந்துபோகாது..
என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...

இன்றாவது கோழிக்குஞ்சு முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..
சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..
ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில், ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...

மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு. பட்டுக்குஞ்சை..
இருகைகளாலும் பொத்திப்பிடித்து, தொட்டு மகிழ்ந்த..
இனிய அந்த நாட்கள் இனிவருமா...? அதுமட்டுமா...

அன்று பூத்த மலர்களை, மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..
அதிகாலை பிராத்தனைக்காக ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..
அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...

அன்றைய காலைப்பொழுதில், அதிகாலை மலராக நானும்
அனைவரோடும் அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று
அதிகாலை மலர் நானாக மலர் போல மகிழந்திருந்தேன்..

பொன்னான அந் நாட்கள், இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..
பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..
பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன். மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.

பட்டபாடும், அடைந்த மகிழ்வும் நாள்முழுக்க எழுதினாலும்..
யாருக்கும் புரியாது..அந்த மன நிலை.
யாருமே பக்கத்திலின்றி, பழசையெல்லாம் மனதில் போட்டு பதிவாக்கிறேன் ஏனோ இன்று.




--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: