
தொலை தூரத் தேசமொன்றில்
நீயிருந்த போது..
தொலைத்திருந்தேன் தனிமையில்
நானும் இன்பமான நாட்களை..
அருகில் இருந்து ஆரத் தழுவி..
இமை வருடி
இமைக்காமல் நீ பார்த்திருக்கும்
அழகையெல்லாம் நினைத்தபடி..
இரவிரவாக கடிதம் எழுதி..
இல்லை இல்லை அது கடிதம் என்று நீ
ஒரு போதும் சொன்னதுமில்லை..
என் உணர்வின் வலிகளை விழிகள் சுமந்தபடி..
மழை நீர் வந்து அழியும் கோலமாய்..
ஒவ்வொரு காகிதத்தின் எழுத்துக்களை
கண்ணீரால் நனைத்து..
உன் கரம் வந்தடையும் எனது காதல் கடிதங்கள்..
பதிலுக்கு பாடல் வரிகளோடு முத்தங்கள் சுமந்து வரும் உன்
மடலை கண்ணீரோடு பலதடவை வாசித்து..
கடலில் அழும் மீனாக யாருக்குமே தெரியாமல்..
என் மடல் வீங்க உறங்கிடுவேன் நெஞ்சோடு அணைத்தபடி..
பத்திரமாய் அத்தனையும் நீ எடுத்து வந்து..
என் முன்னிலையில் வாசித்த போது..
மார்கழியில் பழுத்து வெடித்துச் சிதறிய மாதுளை முத்துக்கள் போல்..
வெட்கத்தால் அகம் மலர முகம் பொத்தி சிவந்திருந்தேன்..
பதிலுக்கு நானும் ஒரு மூட்டையாக சேர்த்து வைத்திருந்த
உன் அன்புக் காதல் கடிதங்களை உனக்கு முன்னால் வாசிக்க
அதை நீ எட்டி எட்டிப் பறிக்க வர..
நான் கடிதத்தையும் கொண்டு ஓடிப்போக..
சிரித்துச் சிரித்து மகிழ்ந்த அந்தப் பொன்னான நினைவுகள் போல்..
இனிக்கவில்லை மின்னஞ்சலில் வரும் உன் கடிதங்கள்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி